பேரறிஞர் அண்ணா நினைவிடம் மற்றும் பேரறிஞர் அண்ணா அருங்காட்சியகம்

மெரினா கடற்கரை, காமராசர் சாலை, சென்னை

வணக்கம்!

தன்னுடைய அறிவால், ஆற்றல் மிகுந்த பேச்சால், அன்புசெறிந்த அரவணைப்பால், தலைமைப் பண்பால் தமிழர்களைப் பெரிதும் ஈர்த்திட்ட அறிஞர் அண்ணா அவர்கள் காஞ்சிபுரத்தில் நடராஜர் பங்காரு அம்மாள் இணையர்க்கு மகனாக 15.09.1909 அன்று பிறந்தார்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா எனும் மூன்றெழுத்து மந்திரச் சொல் உச்சரித்திடும் போதினிலெல்லாம் புதிய சக்தியொன்று பிறந்திடும் நம் உயிர் நெஞ்சினிலே என்று எண்ணி வியக்கச் செய்தவர். எளிய குடும்பத்திலே பிறந்து நல்ல மாணவராக, ஆற்றல்மிகு பேச்சாளராக, அடுக்குமொழி வித்தகராக, சிறந்த எழுத்தாளராக, நல்ல நூலாசிரியராக, நாடக ஆசிரியராக, பண்பட்ட அரசியல்வாதியாகப் பன்முகத் தன்மை கொண்டு; பண்பிற்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவர்.

இளைஞர்களின் ஏகோபித்த எழுச்சியினை ஈர்த்திட்ட அவர் "கடமை. கண்ணியம், கட்டுப்பாடு" என்கின்ற புதிய மூன்றெழுத்து மந்திரத்தை மக்களின் மனங்களிலே விதைத்தவர். அரசியலில் குடும்பப் பாச உணர்வினையூட்டி, மாற்றாரையும் மதிக்கக் கற்றுத் தந்த மாபெரும் ஜனநாயகத் தலைவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா என்றால் அது மிகையில்லை.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களையே தன் தலைவராகக் கொண்ட பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் ஆட்சிக் காலம் குறுகியதேயானாலும், அடித்தள மக்கள் ஏற்றம் பெற்றிட எண்ணற்ற நல்ல பல திட்டங்களைத் தந்திட்டவர். தாய்மொழியாம் நம் அன்னைத் தமிழின்பால் கொண்டிருந்த தணியாத தாகத்தினால் 'சென்னை மாகாணம்' என்று அழைக்கப்பட்ட நமது மாநிலத்தைத் 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம், சுயமரியாதைத் திருமணச் சட்டம், இந்தியாவிலேயே முதன்முறையாக அரசுப் பேருந்துகள் நாட்டுடைமையாக்கம்,கல்வியில் தமிழுக்கு முதலிடம், உலகத் தமிழ் மாநாடு, இருமொழிக் கொள்கை,மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று இந்தியாவிற்கே தமிழகத்தை முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்திட முனைப்புடன் பணியாற்றினார்.

1967ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் நாள் புனித ஜார்ஜ் கோட்டையில் 'தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகம்' என மாற்றம், அரசு முத்திரை கோபுரச் சின்னத்திலிருந்த 'கவர்மெண்ட் ஆப் மெட்ராஸ்' என்ற ஆங்கில வாக்கியம் நீக்கப்பட்டுத் 'தமிழ்நாடு அரசு' என்று மாற்றியதோடு, அம்முத்திரையில் 'சத்யமேவ ஜெயதே' என்ற வடமொழி வாக்கியம் நீக்கப்பட்டு 'வாய்மையே வெல்லும் என அழகுத் தமிழில் மாற்றியமைத்தார்.

'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்றுரைத்த பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் 03.02.1968 அன்று அகால மரணத்தை தழுவினார். அன்னாரின் இறுதி ஊர்வலத்தில் இலட்சக்கணக்கில் பொதுமக்கள் பங்கேற்று உலகச் சாதனை படைத்தது வரலாறு.

பேரறிஞர் அண்ணா அவர்களுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில், சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் 14.9.1973 அன்று திறந்து வைக்கப்பட்டது. அவ்வளாகத்தில் அணையா விளக்கும், வாழ்க்கை வரலாற்று ஒளிப்படங்கள் கொண்ட அருங்காட்சியகம் 15.9.1998 அன்று திறந்து வைக்கப்பட்டது. மேலும் 1970ஆம் ஆண்டு அஞ்சல் தலை, 1971ஆம் ஆண்டு சென்னையின் மவுண்ட் ரோடுக்கு அண்ணாசாலை எனப் பெயர் சூட்டல், அரசின் சார்பில் வாங்கப்பட்ட இரண்டு கப்பல்களுக்கு 'எம்.வி.தமிழண்ணா' மற்றும் 'தமிழண்ணா' என்று பெயர் சூட்டல், 1978ஆம் ஆண்டு கிண்டியில் அரசுத் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டல். 1990இல் சென்னைப் பன்னாட்டு விமான நிலையத்திற்கு 'அண்ணா பன்னாட்டு விமான நிலையம்' என்று பெயர் சூட்டப்பட்டது. அன்னாரது பிறந்த செப்டம்பர் திங்கள் 15ஆம் நாளை அரசு விழாவாகச் கொண்டாடப்பட்டு வருகிறது.

நன்றி! வணக்கம்.

பேரறிஞர் அண்ணா நினைவிடம் மற்றும் பேரறிஞர் அண்ணா அருங்காட்சியகம்

தன்னுடைய அறிவால், ஆற்றல் மிகுந்த பேச்சால், அன்புசெறிந்த அரவணைப்பால், தலைமைப் பண்பால் தமிழர்களைப் பெரிதும் ஈர்த்திட்ட அறிஞர் அண்ணா அவர்கள் காஞ்சிபுரத்தில் நடராஜர் பங்காரு அம்மாள் இணையர்க்கு மகனாக 15.09.1909 அன்று பிறந்தார்.